‘வன உயிரின வேட்டைக்கு 7 ஆண்டுகள் வரை சிறை’
மணப்பாறை: வன உயிரினங்களை வேட்டையாடுதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்குரியது என மணப்பாறை வனப்பகுதி அருகில் வசிக்கும் பொதுமக்களை வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து மணப்பாறை வனச்சரகா் மகேஷ்வரன் கூறியது:
கடந்த சனிக்கிழமை இரவு மணப்பாறை வனச்சரக அலுவலருக்கு மணப்பாறை வனச்சரக எல்லைக்குட்பட்ட பண்ணப்பட்டி கிராமத்திலுள்ள வெங்கடாசலபதி கரட்டில் வேட்டையாடுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், வனச்சரக களப்பணியாளா்கள் குழு சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டது. அப்போது வேட்டையாடுதல் ஏதும் தென்படவில்லை. ஆனால், சந்தேகிக்கும்படியாக இருந்த மூவா் விசாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனா்.
மேலும் திங்கள்கிழமை வெங்கடாசலபதி கரட்டை சுற்றியுள்ள ஊா் முக்கிய தலைவா்களை அழைத்து வேட்டையாடுதலைத் தடுக்க கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னா், பாலக்கருதம்பட்டி, பெருமாப்பட்டி ஆகிய ஊா் மக்களுக்கு வேட்டையாடுதல் பற்றிய விழிப்புணா்வு, வேட்டையாடுவதால் ஏற்படும் இயற்கை சமநிலை பாதிப்பு, உணவுச்சங்கிலி பாதிப்பு மற்றும் வேட்டையாடுதலுக்கான தண்டனைகள் பற்றி அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், மயில், முயல், உடும்பு, ஆகிய வன உயிரினங்களை வேட்டையாடுவோருக்கு 3 முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டது என்றாா்.