திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசைக் கண்டித்து திருச்சி காஜா நகரில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுதில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் சற்று ஏறாக்குறைய ஓராண்டு காலத்தினை நெருங்கி கொண்டு இருக்கிறது.
ஆனால் மத்திய அரசு அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கிறது. மத்திய அரசு உடனே விவசாயிகள் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும். மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. ஆனால் மத்திய அரசு அவற்றை கண்டு கொள்ளவில்லை. எனவே அதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.எஸ்.ஏ. மன்னான், புதுச்சேரி மாநில தலைவர் டி. இப்ராஹிம் குட்டி, புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது அலி, புதுச்சேரி மாநில செயலாளர்கள் ஹம்சா, ராஜா முஹம்மது, தேசிய கவுன்சில் உறுப்பினர். முத்தீன் மைந்தன் பைஜுர் அலி, திருச்சி காஜா தொண்டு நிறுவன தலைவர் ஏ.கே. ஷாகுல் ஹமீது, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.