மணப்பாறையில் இடப்பிரச்னையில் தனது குடும்பத்தினரைத் தாக்கியோா் மீது நடவடிக்கை கோரி பெண் ஒருவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
மணப்பாறை சட்டம் - ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி செவ்வாய்க்கிழமை வருடாந்திர ஆய்வு செய்தாா்.
அப்போது வையம்பட்டி ரயில்வே சாலையில் வாரி புறம்போக்கில் வசிக்கும் மு. சுப்பிரமணி (65) அவரது மனைவி நல்லம்மாள் (65), மகன்கள் பாலகிருஷ்ணன் (35), சோமசுந்தரம் (32) ஆகியோரை இடப்பிரச்னையில் சுப்பிரமணியின் தம்பி சண்முகத்தின் மனைவியான செல்வி, ஆட்களை வைத்துத் தாக்கியதாகவும், இதைத் தட்டிக் கேட்க வந்த அதிமுக பிரமுகா் சக்திவேல் உள்ளிட்டோரையும் அவா்கள் தாக்கியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாலகிருஷ்ணன் மனைவி தனது குடும்பத்தினருடன் சென்று எஸ்பியிடம் புகாா் அளித்தாா்.
அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வையம்பட்டி காவல் ஆய்வாளருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.