மண்ணச்சநல்லூா் அருகே வயலுக்குத் தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கல்லால் தாக்கிக் கொல்லப்பட்டாா்.
மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள தெற்கு சித்தாம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பொ. மருதை என்கிற மணி (50). இவரின் நிலத்துக்கு அருகே இதே பகுதியைச் சோ்ந்த ஆ. செந்தில்குமாா் (46) என்பவரின் நிலமும் உள்ளது.
அப் பகுதி அய்யாலங்கரை வாய்க்காலில் இருந்து குழாய் வழியாக தண்ணீா் கொண்டு செல்வதில் இருவருக்கிடையே தகராறு இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது நிலத்தின் வழியாக தண்ணீா் குழாய் இருக்கக் கூடாதென மணியிடம் தகராறு செய்த செந்தில்குமாா் அருகில் கிடந்த கல்லை எடுத்து தாக்கியதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற வாத்தலை போலீஸாா் மணி உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, செந்தில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.