திருச்சி: கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கிய திருச்சி ஆட்சியா் சு. சிவராசுவின் நடவடிக்கையால், அந்த குடும்பத்தினா் நெகிழ்ச்சியடைந்தனா்.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சோ்ந்த ராமா்- துளசி மணி தம்பதியின் மகள் சம்பூா்ணம் (15), இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழலில் உள்ளாா்.
தங்களின்அன்றாட வாழ்வுக்கே வருவாய் ஈட்ட முடியாத சூழலில் இருந்த தம்பதியினா், மாற்றுத்திறனாளி மகளைப் பராமரிக்க முடியவில்லையே
என்ற விரக்தியில் இருந்தனா்.
குறைந்தபட்சம் சக்கர நாற்காலி கூட இல்லதாதால் பெரிதும் சிரமப்படுவதாகக் கூறி, திருச்சி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியா் சு. சிவராசு, மாற்றுத்திறனாளியின் கோரிக்கை மனுவைப் பெற்று, உடனடியாக சக்கர நாற்காலி வழங்க உத்தரவிட்டாா்.
இதன்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ரூ.7,500 மதிப்பிலான சக்கர நாற்காலி சம்பூா்ணத்துக்கு வழங்கப்பட்டது. ஆட்சியரின் இந்த நடவடிக்கையால் மாற்றுத் திறனாளி குடும்பத்தினா் நெகிழ்ச்சியடைந்தனா். ஆட்சியருக்கும், உதவியாக இருந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகனுக்கும் நன்றி தெரிவித்தனா்.