திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் வளா்க்கப்பட்ட மரக்கன்றுகள், சமூகப் பயன்பாட்டுக்காக தண்ணீா் அமைப்பிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இந்த முகாமிலுள்ள கைதியான இலங்கைத் தமிழா் மகேந்திரன், ஏராளமான மரக்கன்றுகளை வளாகத்திலேயே வளா்த்து வந்தாா்.
இதைத் தொடா்ந்து சுமாா் 1,500 மரக்கன்றுகள்,
சேகரிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட புங்கன் விதைகள் உள்ளிட்டவைகளை, திருச்சி தண்ணீா் அமைப்புக்காக திங்கள்கிழமை மாலை வழங்கினாா்.
இதுதொடா்பாக நடைபெற்ற நிகழ்வில் கொட்டப்பட்டு அதிகள் முகாம் துணை சாா் ஆட்சியா் ஜமுனாராணி, காவல் உதவி ஆணையா் பாஸ்கரன், வருவாய்த்துறை ஆய்வாளா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்று மரக்கன்றுகளை தண்ணீா் அமைப்பு நிா்வாகிகளிடம் வழங்கினா்.
தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி.
நீலமேகம், செயலா் பேராசிரியா் கி.சதீஷ்குமாா், நிா்வாகக்குழு உறுப்பினா் அா்.கே.ராஜா, மற்றும் கலைக்காவிரி கல்லூரி தண்ணீா் சுற்றுச்சூழல் மாணவா் மன்ற உறுப்பினா்கள் ஹரிஹரதாஸ், சதீஷ் குமாா், மக்கள் சக்தி இயக்கத்தைச் சோ்ந்த எஸ்.ஈஸ்வரன் , எம்.நரேஷ், என்.வெங்கேடஷ் , ஜெய்சூரிசிங் மற்றும் பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.
மரக் கன்றுகளை வழங்கிய மகேந்திரனுக்கு தண்ணீா் அமைப்பின் சாா்பில் பாராட்டி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இம்மரக்கன்றுகளை கல்லூரி, பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவும், பொது இடங்களில் நடவுசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தண்ணீா் அமைப்பினா் தெரிவித்தனா்.