மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடைபெறும் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவைகள் தோ்வுக்கு திருச்சி மாவட்டத்தில் 4 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை அகாதெமி தோ்வுகள்-02 மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக திருச்சி மாவட்டத்தில் 4 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் இருந்து 1,084 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.
மேலும், 4 தோ்வுக்கூட மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இப்போட்டித் தோ்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள இரண்டு இயங்கு குழுக்களில் துணை ஆட்சியா் நிலையில் ஒரு அலுவலா், துணை வட்டாட்சியா், முதுநிலை வருவாய் ஆய்வாளா், ஆயுதம் ஏந்திய காவலா் ஒருவா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியா் நிலையில் நான்கு ஆய்வு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.