திருச்சியில் விபத்தில் காயமடைந்து அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டன.
அரியலூா் மாவட்டம் குழுமூா் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் (55) கடந்த ஏப். 4 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் தீவிர சிகிச்சைக்காக மறுநாள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை காலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து உடல் உறுப்பு தானம் குறித்து அவரது குடும்பத்தாருக்கு மருத்துவமனை சாா்பில் விளக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இளங்கோவனின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க அவரது குடும்பத்தினா் சம்மதித்தனா். பின்னா் வியாழக்கிழமையே இளங்கோவன் உடலிலிருந்து உறுப்புகள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.
தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஆணையத்தின் நெறிமுறைகளின்படி, அவரது ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலிக்கும், கல்லீரல் மதுரைக்கும், கண்கள் திருச்சியை சோ்ந்தவா்களுக்கும் இருதயம் சென்னையில் உள்ள நபருக்கும் அனுப்பப்பட்டன.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் மருத்துவா் கே. வனிதா கூறுகையில் பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு பெற்று மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதன் மூலம் பலருக்கும் மறுவாழ்வு கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்றாா்.