திருச்சி விமான நிலையம் அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரிகள் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சிறப்பு வட்டாட்சியா் ஜெயப்பிரகாசம் தலைமையிலான வருவாய்த் துறையினா், விமான நிலையம் அன்பில் நகா் சந்திப்புப் பகுதியில் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த இரு லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது, அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரிகளை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், அவற்றை விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து புகாரின் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து பிரபாகரன், தன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் 6 யூனிட் மண் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.