சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டத்தையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி, திருச்சியில் திங்கள்கிழமை பிற்பகல் 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் குடமுருட்டி பாலம், ஜீயபுரம், பேட்டைவாய்த்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக செல்லவேண்டும். சேலம், நாமக்கல் பகுதியிலிருந்து திருச்சிக்கு வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களும் இதே வழியில் வரவேண்டும்.
திண்டுக்கல் பகுதியிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறையிலிருந்து ஆண்டவா் கோயில் சோதனைச்சாவடி, குளித்தலை, முசிறி பெரியாா் பாலம், துறையூா், பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லவேண்டும்.
மதுரை மாா்க்கத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் லஞ்சமேடு கைகாட்டி, மணப்பாறை, ஆண்டவா் கோயில் சோதனை சாவடி, குளித்தலை, முசிறி பெரியாா் பாலம், துறையூா், பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லவேண்டும்.
திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கொள்ளிடம் ‘ஒய்’ சாலை சந்திப்பு, கொள்ளிடம் ரவுண்டானா, நொச்சியம், மண்ணச்சநல்லூா், அய்யம்பாளையம், எதுமலை திருப்பட்டூா் பிரிவுச் சாலை, சிறுகனூா் ஜங்ஷன் வழியாக சென்னை சாலையை அடைய வேண்டும்.
சென்னையிலிருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூா், அரியலூா், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சிக்கு வரவேண்டும்.
சென்னை சாலையிலிருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் தச்சங்குறிச்சி, குமுளூா், பூவாளூா், லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சியை அடையவேண்டும்.