மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரைப் பெருவிழா ஒம் சக்தி பராசக்தி பக்தி முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது.
இத்திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவானது ஏப் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து உற்சவ அம்மன் கேடய புறப்பாடு, பூதவாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
அருள்மிகு உற்சவ மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒம் சக்தி பராசக்தி பக்தி முழக்கம் முழங்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், தீ சட்டி ஏந்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்
திருத்தேரோட்ட நிகழ்விற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.