கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் பவானி ஆற்று நீா் அருவிபோல கொட்டுவதால் ஈரோடு மாவட்டமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கோடைக் காலம் துவங்கியது முதல் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகின்றனா்.
மேலும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் பவானிசாகா் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக திறந்துவிடப்படும் தண்ணீா் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீா் வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளிக்கின்றது. கொடிவேரி தடுப்பணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு கொடிவேரி தடுப்பணைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்பணைக்கு செல்லும் நுழைவாயில் அடைக்கப்பட்டு உள்ளே செல்லத் தடை என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில் தடுப்பணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் மே 4ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. மேலும் பராமரிப்புப் பணிகள் முடிந்து, மே 5ஆம் தேதி முதல் அணைக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றனா்.