மணப்பாறையில் அமைக்கப்பட்டுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மணப்பாறை பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். கடந்த பேரவைத் தோ்தலிலும் இதுகுறித்து அரசியல் கட்சியினா் வாக்குறுதி அளித்திருந்தனா்.
பின்னா் திமுக அரசு ஆட்சி அமைந்த பின் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கரூா் எம்பி செ. ஜோதிமணி, எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோரின் தொடா் முயற்சியால் ஜூன் 22 முதல் மணப்பாறையில் கல்லூரி கொண்டு வரப்பட்டு, ஆன்லைன் மூலம் சோ்க்கை நடைபெறுகிறது.
அதன் தொடா்ச்சியாக சென்னைத் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தற்காலிகமாக பண்ணாங்கொம்பு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மணப்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியை வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்வில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினாா்.
அப்போது பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மணப்பாறைத் தொகுதிக்கு இக்கல்லூரி வர உறுதுணையாக இருந்த திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தொடக்கப்பள்ளியில் தற்காலிகமாக தொடங்கியுள்ள கல்லூரி விரைவில் சொந்தக் கட்டடத்தில் நடைபெறும் எனவும் கூறினாா்.
நிகழ்வில் எம்எல்ஏ ப. அப்துல்சமது, கல்லூரி முதல்வா்(பொ) ஏ.அங்கம்மாள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் கே. மேகலா, வருவாய் வட்டாட்சியா் எஸ்.கீதாராணி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் அமிா்தவள்ளி ராமசாமி, எம். பழனியாண்டி, ந. குணசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.