திருச்சி: திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ.சோதனையைத் தொடர்ந்து இன்று அமலாக்கப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில் புதன் கிழமை, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிகாலை 4 முதல் மாலை 6 வரை தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் செல்போன்கள், மடிக்கணினி, சிம்கார்டுகள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 11 பேரிடம் சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், அகதிகளுக்கு உதவியதாக விக்னேஷ்வரன் என்பவரும் தனி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக, இன்று அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அகதிகள் சிறப்பு முகாமில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணையை அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் அஜய் கவுர் தலைமையிலான 5-க்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.