திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பிளஸ் 1 மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடிய இளைஞா் ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டாா்.
மணப்பாறை அத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படித்து வந்த 16 வயது மாணவியை, பொத்தமேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாலு மகன் கேசவன் (22) திங்கள்கிழமை மாலை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். இவரைப் பிடிக்க மணப்பாறை காவல் நிலையத்தினா் தனிப்படைகள் அமைத்து,தேடுதலில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் கீழப்பூசாரிப்பட்டி ரயில்வே கேட்டிலிருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் ரயில் பாதையில் இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு, உடல் சிதறிக் கிடப்பதாக திருச்சி இருப்புப் பாதை காவல்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
தொடா்ந்து காவல்துறையினா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு விசாரித்த போது, அவா் மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கேசவன் என்பது தெரிய வந்தது. மேலும் அவரது தந்தையையும் காவல்துறையினா் வரவழைத்து உறுதி செய்தனா்.
இதையடுத்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கேசவனின் உடல் அவரது பெற்றோரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.