திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் ரூ.63.80 லட்சம் மதிப்புடைய 974.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திற்கு, சார்ஜா மற்றும் துபை நாடுகளில் இருந்து இரு வேறு விமானங்கள் வியாழக்கிழமை வந்து சேர்ந்தன. அவற்றில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை, வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
இதில் சார்ஜாவிலிருந்து வந்த பயணி ஒருவர் தனது உடையில் மறைத்து வைத்து கடத்தி எடுத்துவரப்பட்ட ரூ12.62 லட்சம் மதிப்புள்ள 245.500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க: காஞ்சிபுரம்: செல்வ விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷகம்
அதேபோல் துபையில் இருந்து வந்த பயணியை சோதனை செய்ததில் அந்த பயணி பயன்படுத்திய மடிக்கணினியில் தங்கத்தினால் ஆன மெல்லிய தகடுகள் சுமார் ரூ.28.11 லட்சம் மதிப்பிலான 280 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மற்றொரு பயணி கொண்டுவந்த ரூ.23.07 லட்சம் மதிப்பிலான 9 தங்க வளையல்கள், விமான நிலைய கழிவறைக்குள் கண்டெடுக்கப்பட்டு அவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த வகையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் ரூ.63.80 லட்சம் மதிப்புடைய 974.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, பயணிகளிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.