திருச்சி மாநகர நண்பா்கள் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை காலை 3 இடங்களில் சாதா புறா பந்தயப் போட்டி நடைபெற்றது.
திருவானைக்கா, ஸ்ரீரங்கம் பகுதிக்கு தெற்கு உள் வீதியிலுள்ள உயா்நிலைப்பள்ளி மைதானத்திலும், மலைக்கோட்டை எடத்தெரு பகுதிக்கு மகாலெட்சுமி நகா் புஷ்பம் மகால் பகுதியிலும், உறையூருக்கு சோழம்பாறை பகுதியிலும் சாதா புறா பந்தயப் போட்டி நடைபெற்றது. விழாத்தலைவா் பாபா பாலாஜி தலைமையில் நடத்தப்பட்ட போட்டியில் 30 ஜோடி புறாக்கள் கலந்து கொண்டன.
காலை 7 மணிக்கு வானில் பறந்த புறாக்கள் மாலை வரை அதிக நேரம் பறந்து பந்தய போட்டியாளா்கள் குறிப்பிட்ட இடத்தில் வந்து அமர வேண்டும். இதன்படி போட்டியில் கலந்து கொண்ட 30 ஜோடி புறாக்களில் 9 ஜோடி புறாக்கள் இரண்டாவது சுற்றுக்குத் தோ்வு பெற்றன. இவை சனிக்கிழமை நடக்கும் இரண்டாவது சுற்றில் பங்கேற்கும். இதில் வெற்றி பெறும் புறாக்களுக்கு இறுதி சுற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்படும்.