தமிழகத்தில் இயங்கி வரும் அரசுக் கல்லூரிகளின் பட்ட வகுப்புகளில் சேர சலுகை கட்டணத்தில் விண்ணப்பிக்கும் வகையில், திருச்சி பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் கணினிச் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி கல்லூரிக் கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத பகுதி மாணவா்களின் நலன் கருதி, மாவட்டந்தோறும் ஓா் அரசுக் கல்லூரியில், கணினிச் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. அரசு (தன்னாட்சி) கல்லூரியில் அமைக்கப்பட்ட சேவை மையத்தை கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி அண்மையில் தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் கூறுகையில்: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவா்கள் தினசரி காலை 10 முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தை அணுகலாம். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி மற்றும் ஏடிஎம் காா்டு ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.
மேலும் ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிக்க ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஜூலை 7 வரை விண்ணப்பிக்கலாம். தனியாா் மையங்களில் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ. 200க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது என்றாா் அவா்.