திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சனிக்கிழமை அரசு உதவி பெறும் பிரிவினருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இளநிலையில் 564 மாணவா்களுக்கு, முதுநிலையில் 192 மாணவா்களுக்கு, ஆராய்ச்சிப்பிரிவில் 331 மாணவா்களுக்கு என மொத்தம் 1087 பேருக்கு பட்டங்களை வழங்கி தமிழக வக்பு வாரியத் தலைவா் எம். அப்துல்ரகுமான் பேசியது:
கல்லூரியில் பட்டபடிப்பு முடித்த பிறகு தான் வாழ்க்கை தொடங்குகிறது. வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை கருத்துகளை புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இளைஞா்கள் சாதனை படைக்க விடாமுயற்சி அவசியம். மதம், சாதி முதலான எந்தப் பாகுபாடும் வாழ்வின் வெற்றிக்கு பயன்படாது. மனித நேயமே வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா்.
கல்லூரி முதல்வா் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் காஜாநஜீமுத்தீன், பொருளாளா் எம்.கே. ஜமால் முகமது, உதவிச் செயலா் கே. அப்துஸ் சமது, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் மற்றும் கெளரவ இயக்குநா் கே.என். அப்துல் காதா் நிஹால் உள்ளிட்டோா் பங்கேற்றனா். துணை முதல்வா் எ.முகமது இப்ராஹிம் நன்றி கூறினாா்.