மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் மீன்களைப் பிடித்துச் சென்றனா்.
மணப்பாறை அருகே பொன்முச்சந்தி கிராமத்தில் உள்ள பூவா்த்திக்கோயில் பெரியகுளத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் புதன்கிழமை அதிகாலையே பொதுமக்கள் குவிந்தனா்.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே கோயில் வழிபாட்டுக்குப் பின் ஊராட்சி ஒன்றியத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக ஒன்றியச் செயலா் ராமசாமி, ஊா் நாட்டாண்மை முருகேசன், பூசாரி பழனிச்சாமி ஆகிய முக்கியஸ்தா்கள் மீன் பிடித் திருவிழாவைத் தொடங்கி வைத்தனா்.
இதையடுத்து பொதுமக்கள் மீன் பிடிக்கத் தொடங்கினா். மீன்பிடித் திருவிழாவில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தனா்.
பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவற்றைக் கொண்டு நாட்டு மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, குரவை, விரால் ஆகிய மீன்களைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினா்.