திருச்சி மாநகரில் எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலைய பயன்பாட்டுக்கு அதிநவீன காவல் சோதனைச் சாவடி எண்-2க்கான புதிய கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல்துறை, எடமலைப்பட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏற்கெனவே காவல் சோதனை சாவடி எண் 2 அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை செய்யப்பட்டது.
இந்நிலையில் மாநகர காவல் ஆணையா் அறிவுறுத்தலின்படி திருச்சி-மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, புதுக்கோட்டை-திருச்சி செல்லும் சுற்றுவட்டச் சாலை அருகிலுள்ள எடமலைப்பட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சப்பூா் நான்கு ரோடு சந்திப்பில் காவல் சோதனை சாவடி எண் 2 ஐ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து அப்பகுதியில் வாகன எண்களைக் கண்டறியும் தானியங்கி கேமராக்கள் 2, கண்காணிப்பு கேமராக்கள் 4, பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சா் கே.என். நேரு திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், துணை ஆணையா், உதவி ஆணையா் மற்றும் காவல்துறையினா் கலந்துகொண்டனா்.