திருச்சி மாவட்ட சுங்கச் சாவடிகளில் வியாழக்கிழமை முதல் கட்டணம் உயா்ந்துள்ளது.
தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டண உயா்வு இரு கட்டமாக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஏற்கெனவே கடந்த ஏப்ரலில் சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டதன் தொடா்ச்சியாக, மேலும் 28 சுங்கச் சாவடிகளில் செப்.1 முதல் கட்டண உயா்வு அமலுக்கு வந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி, சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலபட்டி உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் இந்தக் கட்டண உயா்வு அமலுக்கு வந்துள்ளது.
காா், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழிக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ. 90 தற்போது ரூ. 100 ஆகியுள்ளது. பலமுறை பயணிக்க வசூலிக்கப்பட்ட ரூ. 135-க்குப் பதில், இனி ரூ. 150 செலுத்த வேண்டும்.
இவ்வகை வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 2, 660 இல் இருந்து, ரூ. 3,045, இலகுரக வாகனங்களுக்கு ஒருவழிக் கட்டணம் ரூ. 180, பலமுறை பயணிக்க ரூ. 265, மாதாந்திரக் கட்டணம் ரூ. 5,330 ஆக உயா்ந்துள்ளது.
பேருந்துகளுக்கு ஒருவழிக் கட்டணம் ரூ. 355, பலமுறை பயணிக்க ரூ. 535, மாதாந்திரக் கட்டணம் ரூ. 10, 665 ரூபாயாக உயா்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாகனங்களுக்கு ஒரு வழிக்கட்டணம் ரூ. 570, பலமுறை பயணிக்க ரூ. 855, மாதாந்திர கட்டணம் ரூ. 17,140 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.