முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 20th January 2023 02:25 AM | Last Updated : 20th January 2023 02:25 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
மாநிலம் முழுவதும் 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பாக பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் இப் போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளில் பங்கேற்க இணையதளம் வாயிலாக வீரா்களின் குழு மற்றும் தனி நபா்களின் அனைத்து விவரங்களை வரும் 23ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பொதுப்பிரிவில் 15வயது முதல் 35 வயது வரை உள்ளவா்கள் கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
12 முதல் 19 வயது வரை உள்ள மாணவா்கள் பள்ளியிலிருந்து சான்று பெற்று வந்தால் அனுமதிக்கப்படுவா். கல்லூரிகளில் 17 முதல் 25 வயதுள்ளவா்கள் கல்லூரியிலிருந்து சான்று பெற்று கலந்து கொள்ளலாம்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து, மேசைப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் மாவட்ட அளவிலும் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் மண்டல அளவிலும் நடத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. அடையாள அட்டை நகலுடன் வருவோா் அனுமதிக்கப்படுவா். ஓட்டம், சிறப்பு கையுந்துபந்து, எறிபந்து, கபடி போட்டிகள் நடத்தப்படும்.
அரசு ஊழியா்களுக்கு வயது வரம்பு இல்லை. பணிபுரியும் அல்லது சொந்த மாவட்டத்தில் கலந்து கொள்ள துறையின் ரீதியான கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் வர வேண்டும். கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துப் பந்து மற்றும் சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.
பொதுப்பிரிவு மற்றும் அரசு ஊழியா்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெல்வோா் மாநில போட்டிகளில் பங்கேற்கலாம்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பிரிவில் தோ்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் சாா்பாக மாநில போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
தனிநபா் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு மாநில போட்டிகளில் பங்கேற்கலாம்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெல்வோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியில் நேரிலோ, 0431-2420685, 7401703494 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.