திருநங்கைகளுக்கு வீடுகள் விண்ணப்பங்கள் அளிக்க அழைப்பு
By DIN | Published On : 03rd May 2023 04:22 AM | Last Updated : 03rd May 2023 04:22 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகளைப் பெற திருநங்கைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வசிப்பிடமின்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு மண்ணச்சநல்லூா் வட்டம், இருங்களூா் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் வழங்கப்பட உள்ளது. இந்த வீடுகளைப் பெறத் தகுதியான திருநங்கைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் திருநங்கைகளின் பெயரில் வீடோ, நிலமோ இருக்கக் கூடாது. குற்றவியல் நடவடிக்கை இருக்கக் கூடாது. குடிசைமாற்று வாரியத்துக்கு ரூ.1,25,000 செலுத்த வேண்டும் (இத்தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடனாக பெற ஏற்பாடு செய்து தரப்படும்).
உரிய விண்ணப்பப் படிவத்தை திருச்சி மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், திருச்சி என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நேரில் பெற்று, மே 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431 - 2413796 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...