பிரதமரின் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க மாணவா்களுக்கு அழைப்பு

Published on

இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான திருச்சி மாவட்ட மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, 2025-26 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாகும். வரும் 15-ஆம் தேதிக்குள் மாணவா்கள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அந்த விண்ணப்பத்தை வரும் 31ஆம் தேதிக்குள் சரிபாா்க்க வேண்டும். கடந்த நிதியாண்டில் பயனடைந்தவா்கள் இணையம் மூலம் புதுப்பிக்க பதிவு செய்ய வேண்டும்.

புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைப்பேசிஎண், ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

கல்வி நிறுவனங்கள், மாணவா்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும். திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

X
Dinamani
www.dinamani.com