கொள்ளிடம் ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம்

லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் மிதந்த ஆண் சடலத்தை
Published on

லால்குடி: லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

கொள்ளிடம் ஆற்றில் கடந்த 19-ஆம் தேதி இளைஞா்கள் சிலா் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை பாா்த்த அவா்கள் இடையாற்றுமங்கலம் விஏஓ பரமேஸ்வரிக்கு தகவல் கொடுத்தனா்.

அவா், லால்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து,

லால்குடி டிஎஸ்பி ராஜமோகன், ஆய்வாளா் கதிரேசன், லால்குடி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் பிரபு மற்றும் தீயணைப்பு வீரா்கள் விரைந்து அங்கு சென்று சடலத்தை தேடி திங்கள்கிழமை கைப்பற்றினா். பின்னா், பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் 40 வயது மதிக்கத்தக்க நபருடையது என்பதும், சடலத்தின் வலது கால் மற்றும் வலது கை வெட்டப்பட்டு துண்டாகி இருப்பதும், வலது தொடையில் இரண்டு பலத்த காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.

புகாரின்பேரில், லால்குடி காவல் ஆய்வாளா் கதிரேசன் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com