ஆரணி, பிப் 10: தானே புயல் காரணமாக பாதிப்படைந்த இடங்களில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று ஆரணி காங்கிரஸ் எம்.பி கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
திண்டிவனத்திலிருந்து ஆரணி வழியாக நகரி வரை செல்லும் புதிய ரயில் பாதை திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நில ஆர்ஜிதப்பணிகள் முடிந்துவிட்டன. இப்போது வேலூர் மாவட்டத்தில் மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது.
ஆரணியில் பட்டு ஜவுளிப் பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தானே புயல் காரணமாக பாதிப்படைந்த இடங்களில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் மத்திய அரசு நிவாரணத் தொகையாக ரூ.500 கோடி வழங்கியுள்ளது. இதேபோல் தானே புயல் காரணமாக பாதிப்படைந்த புதுச்சேரிக்கும் ரூ.125 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார் அவர்.
ஆரணி எம்எல்ஏ பாபு முருகவேல், திமுக மாவட்டப் பிரதிநிதி விண்ணமங்கலம் ரவி, பாமக மாவட்டச் செயலர் ஆ.வேலாயுதம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டி.பி.ஜே.ராஜாபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.