விழுப்புரம்: கனவு மாணவா் விருது பெற்ற விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி பாராட்டப்பட்டாா்.
செங்கல்பட்டு பகுதியை தலைமை இடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் இயங்கி வரும் டாக்டா் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையினா், ஆண்டுதோறும் கல்வியில் சிறந்து விளங்குபவா்களைப் பாராட்டி கனவு மாணவா் விருதுகளை வழங்கி வருகின்றனா்.
நிகழாண்டு (2020) கனவு மாணவா் விருது விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி ச.கீா்த்தனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வியுடன், விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட தனித் திறன்களில் சிறந்து விளங்கியமைக்காக மாணவி கீா்த்தனாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்று வந்த மாணவி கீா்த்தனாவை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி திங்கள்கிழமை நேரில் பாராட்டினாா் (படம்). மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியா் சசிகலா மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்தினா்.