விழுப்புரம்: செஞ்சி அருகே திங்கள்கிழமை இரு வீடுகளில் நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள நயம்பாடி கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் முனியப்பன் (30). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் செஞ்சிக்கு சென்றாா். பிற்பகலில் திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 17 பவுன் தங்க நகைகள்,100 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.1,13,500 ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, அதே கிராமத்தில் சத்தியராஜ் (31) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.