தேவாலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டம்
By கடலூர் | Published on : 28th March 2016 06:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
உலக மீட்சிக்காகப் பாடுபட்ட இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, 3ஆவது நாளில் உயிர்த்தெழுவதை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையின் முன்தொடர்ச்சியாக இயேசு நாதர் மலைகளில் பிரசங்கம் செய்வது, அவரது சீடர்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி போன்றவையும் நிகழ்த்தப்படும்.
இதன்படி, கடந்த பிப்.10ஆம் தேதி முதல் கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் தவக்கால நோன்பிருந்தனர்.
நோன்பு முடியும் ஒருவாரம் புனித வாரமாகக் கருதப்பட்டு குருத்தோலை பவனி, இயேசு நாதர் தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி பணிவை வெளிப்படுத்தியதை நினைவுகூரும் பெரிய வியாழன் ஆகியவை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை இயேசுநாதரை சிலுவையில் அறையும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு, அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திவ்ய நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை ஜெப வழிபாடு, ஆண்டவரின் திருப்பாடு வழிபாடுகள் நடைபெற்றன. சனிக்கிழமை பாஸ்கா எனப்படும் உயிர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான இயேசு நாதர் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் பாதிரியார் அந்தோணிராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதேபோல் மாவட்டம் முழுவதும் சில தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு ஜெபம் நடைபெற்றது. மற்ற தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு
ஜெபம், திருப்பலி ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.