கால்நடைத் துறை உதவி மருத்துவர்கள், அலுவலர்கள் பதவி உயர்வு தொடர்பான அரசாணையை அமல்படுத்தக் கோரி, புதன்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கால்நடைத் துறையில் பணியாற்றும் உதவி மருத்துவர்களுக்கு 8 ஆண்டுகள் பணி நிறைவுற்றால் அவர்களை மருத்துவர்களாகவும், 16 ஆண்டுகள் பணி நிறைவுற்றால் முதுநிலை மருத்துவர்களாகவும், 24 ஆண்டுகள் நிறைவுற்றால் முதன்மை மருத்துவர்களாகவும் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு அளிக்குமாறு தமிழக அரசு கடந்த 28.2.2017 அன்று அரசாணை பிறப்பித்தது.
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பதவி உயர்வு மறு சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த அரசாணையை திடீரென நிறுத்திவைக்க நிதித் துறை உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு கால்நடைத் துறையில் பணியாற்றும் உதவி மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உடனடியாக அமல்படுத்தக் கோரி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம், கால்நடை மருத்துவ அலுவலர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து, கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள மண்டலக் கால்நடைப் பெரு மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கால்நடை உதவி மருத்துவர்கள் 54 பேரும், மருத்துவ அலுவலர்கள் 10 பேரும் விடுப்பு எடுத்ததால், கடலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே கால்நடை மருத்துவ அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ராகவன் தலைமையில், மாவட்டச் செயலர் பொன்னம்பலம், உதவி மருத்துவர் சங்கத்தின் மாவட்டச் செயலர் நடராஜன், துணைத் தலைவர் அண்ணாதுரை, துணைச் செயலர் சுந்தரம், கோட்டச் செயலர்கள் வேல்முருகன், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.