விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
விருத்தாசலத்தை அடுத்த எடையூரில் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பொது இடத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கே இடத்தை அனுமதிக்குமாறு அந்தப் பகுதியினர் வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தனராம்.
எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு தனி நபருக்குச் சாதகமாக அலுவலர்கள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், வட்டாட்சியர் அளித்த முன் மொழிவின் மீது கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரியும் விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விளாங்காடூர் பேருந்து நிறுத்தம் அருகே இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் கோகுலகிறிஸ்டீபன் தலைமை வகித்தார். இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மற்றும் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் மறியலில் தொடர்ந்தது.
எனவே, போலீஸார் பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.