கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பேசியதாவது: முப்படை வீரர்களின் தியாகத்தையும், வீரச் செயல்களையும் போற்றிடும் வகையில் படைவீரர் கொடிநாள் விழா ஆண்டுதோறும் டிச.7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கொடிநாள் வசூல் இலக்கு ரூ.47,80,700. இந்த இலக்கைவிட ரூ.9,12,300 கூடுதலாகப் பெற்று மொத்தம் ரூ.56,93,000 வசூல் செய்யப்பட்டது. நிகழாண்டுக்கு அரசு நிர்ணயித்துள்ள கொடிநாள் இலக்கு ரூ.52,58,800 ஆகும். இந்த இலக்கைவிட கூடுதலான தொகையை கொடிநாள் வசூலாக அனைத்துத் துறை அலுவலர்களும் பெற்றுத்தர வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் 22 பேர் மற்றும் அவர்களை சார்ந்தோரின் சிறார்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.3,93,895-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க.தெய்வசிகாமணி, முன்னாள் படைவீரர் நல அலுவலகக் கண்காணிப்பாளர் ஆயிஷா பேகம், நல அமைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.