சிதம்பரத்தில் பழிக்குப் பழியாக, கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 5 பேரை ஆயுதங்களுடன் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் வடக்குரத வீதியில் ஆயுதங்களுடன் சிலர் நடமாடுவதாக டிஎஸ்பி ஆர்.பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிதம்பரம் கோட்ட தனிப் படை போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்றிருந்த 5 பேரை பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பி ஓடினர்.
போலீஸார் துரத்திச் சென்று 5 பேரையும் பிடித்தனர். விசாரணையில் இவர்கள் சிதம்பரம் முத்துமாணிக்கநாடார் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் விஜயகுமார் (24), மாசிலாமணி மகன் ராஜா (24), மீனவர் காலனி வாழைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார் (24), அண்ணா தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (30), பெருமாள் மகன் சுப்பு என்ற கார்த்தி (20) ஆகியோர் என தெரியவந்தது.
மேலும், தலைமறைவான முத்துமாணிக்கநாடார் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வி (50), பூதகேணியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் விக்கி (20) ஆகியோரை தேடி வருகின்றனர்.
பிடிபட்ட 5 பேரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: கடந்த 22-7-2018 அன்று சிதம்பரம் முத்துமாணிக்க நாடார் தெருவைச் சேர்ந்த கொத்தனார் வினோத்குமார் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு பழிக்குப், பழியாக சுரேஷ் என்ற வாலிபரை கொலை செய்ய வினோத்குமாரின் சகோதரர் விஜயகுமார் உள்ளிட்ட 7 பேர் திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் கே.நாகராஜன் ஆகியோர் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.