கடலூர் அருகே ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகைகளை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனர்.
கடலூர் செம்மண்டலம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம் (57). செங்கல்பட்டில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி திலகவதி (50), எம்.புதூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வழக்கம்போல வேலைக்குச் சென்றனர்.
இரவில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸார் நேரில் வந்து விசாரித்தபோது, பீரோவில் வைத்திருந்த 32 பவுன் நகைகள் திருடுபோனதாக ஞானபிரகாசம் தரப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.