பண்ருட்டியில் திமுக பிரமுகர் மகனை கத்தியால் குத்திய பெட்டிக் கடைக்காரரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி, வ.உ.சி. தெருவில் வசிப்பவர் திமுக பிரமுகர் குணா. இவரது மகன் சியாம் சுந்தார் (21) மும்பை மருத்துவக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
தீபாவளிப் பண்டிகைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து வெளியே வந்த சியாம் சுந்தரை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெட்டிக் கடை உரிமையாளரான
சுந்தரமூர்த்தி (45) திடீரென கத்தியால் குத்தினார்.
சியாம் சுந்தரின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சியாம் சுந்தர் சிகிச்சை பெற்று வருகிறாராம்.
தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், சியாம் சுந்தரின் தாத்தா பச்சையப்பன் அண்மையில் காலமானார். இவர், பண்ருட்டி நகர்மன்றத் தலைவராக இருந்த போது, சுந்தரமூர்த்திக்கும், அவரது அண்ணனுக்கும் இடையே இருந்த சொத்துப் பிரச்னை தொடர்பாக பஞ்சாயத்து செய்தாராம். அதில், சுந்தரமூர்த்திக்கு பாதகமாகவும், அவரது அண்ணனுக்கு சாதகமாவும் நடந்து கொண்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சியாம்
சுந்தரை கத்தியால் குத்தியதாகத் தெரிவித்துள்ளார்.