கடலூரில் போக்குவரத்து விதிகளை மதித்து தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு காவல் துறையினர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, கடலூர் புதுநகர் காவல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை கடலூர் நகருக்குள் தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர்களை கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. காவல் நிலைய ஆய்வாளர் த.ச.சரவணன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில், தலைமை தபால் நிலையம் வழியாக தலைக் கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர்களைப் பாராட்டி அவர்களுக்கு கதராடை அணிவிக்கப்பட்டது.
தலைக் கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றியதால், "சிறந்த குடிமகன்' என்று வாழ்த்தி கடலூர் புதுநகர் காவல் நிலையம் சார்பில் பாராட்டு மடலை ஆய்வாளர் சரவணன் வழங்கினார்.
உதவி ஆய்வாளர்கள் க.கவியரசன், த.சதீஷ்குமார், ம.கதிரவன், காவலர் ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.