நெய்வேலியில் காசோலையை திருடி பண மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நெய்வேலி, வட்டம் 7-இல் வசிப்பவர் சந்திரபாபு (57). வட்டம் 29-இல் வசிப்பவர் குணசேகரன் (55). இவர்கள் இருவரும் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த மார்ச் 16-ஆம் தேதி இருவரும் வட்டம் 29-இல் உள்ள பல்பொருள் அங்காடியில் தேனீர் அருந்தினராம். அப்போது, சந்திரபாபுவின் கைப் பையிலிருந்த வங்கிக் காசோலையை குணசேகரன் திருடிச் சென்றாராம்.
மேலும், அந்தக் காசோலையில் போலியாகக் கையெழுத்திட்டு சந்திரபாபுவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2,81,000 பணத்தை, தனது மனைவி மணிமேகலை கணக்கு வைத்துள்ள கூட்டுறவு வங்கியின் சேமிப்புக் கணக்கில் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டாரம். இதுகுறித்து சந்திரபாபு அளித்த புகாரின் பேரில் தெர்மல் போலீஸார் குணசேகரன், அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.