குறிஞ்சிப்பாடியில் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த போதைப் பொருள்களை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி நகரப் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களை அதிகளவில் பயன்படுத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் எஸ்.பிரசன்னா தலைமையிலான போலீஸார் பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்டிக் கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக்கடை உரிமையாளர் சீனு (42), அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்த வைத்தியநாதன் (54) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து குட்கா பொருள்கள், 10 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.