பயிர் சேதத்துக்கு உடனடி நிவாரணம்: அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுறுத்தல்

இயற்கைப் பேரிடரால் பயிர் சேதம் ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை

இயற்கைப் பேரிடரால் பயிர் சேதம் ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகள் நலவாழ்வு தொடர்பான மாவட்ட அளவிலான ஆய்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை வகித்து ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், விவசாயிகளின் தொழில்நுட்பத் திறன், நிகர வருமானம் அதிகரித்தல், வேளாண்மையின் நிலையற்ற தன்மைக்கு எதிராக விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.  மேலும், மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பை அதிகரித்தல், நீராதாரங்கள், இடுபொருட்கள், மத்திய மாநில திட்டங்கள், வங்கிக் கடனுதவி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வேளாண்மை மற்றும் அதன் சார்பு துறைகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நெல், பயறு வகைப் பயிர்களில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கிட திருந்திய சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் அதிகப்படியான பரப்பில் கடைப்பிடிக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணியை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். இயற்கை பேரிடரின்போது பயிர் சேதம் ஏற்பட்டால் அதற்குரிய நிவாரணத் தொகையை உடனடியாக பெற்று வழங்கிட கருத்துருக்களை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், சார்-ஆட்சியர்கள் கே.எம்.சரயூ, எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) மகேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் சி.அண்ணாதுரை, கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் வ.சி.கோமதி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எம்.டி.கிருபாகரன், தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜாமணி, வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் பழனிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com