தனியார் பேருந்தை அதிவேகத்தில் இயக்கிய ஓட்டுநருக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் புதன்கிழமை இரவு ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். பின்னர், கடலூர் திரும்புவதற்காக காரில் வந்தபோது, கடலூர் - புதுச்சேரி சாலையில் ஒரு தனியார் பேருந்து அதிக வேகமாக இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் பேருந்தை எஸ்.பி. தனது கார் மூலம் விரட்டிச் சென்று ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் பேருந்தை மடக்கினார். பின்னர், பேருந்து ஓட்டுநரை கீழே இறங்கச் செய்து, வேகமாக வாகனம் இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விளக்கினார். அதன்பின்னர், பேருந்தின் உரிமையாளரை வரவழைத்து அவருக்கும் அறிவுரை வழங்கினார். பேருந்துகளை மிதமான வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். வேகமாக பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு பேருந்துகளின் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அவர்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.