குறிஞ்சிப்பாடி அருகே ஊரக வேலை உறுதித் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குறிஞ்சிப்பாடி வட்டம், சித்தாலிக்குப்பம் காலனி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர், அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் வியாழக்கிழமை ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியில் ஈடுபட்டார். அப்போது, பணித் தளத்தில் திடீரென மயக்கமடைந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் ராஜேந்திரன் உயிரிழந்ததாகக் கூறி சித்தாலிக்குப்பம் காலனி மக்கள், அவரது உறவினர்கள் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்துச் சென்றனர். இந்த மறியலால் அந்தப் பகுதியில் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.