சம்பா பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் உடனடியாக பயிர்க் காப்பீடு செய்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கைச் சீற்றம், எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு மகசூல் இழப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
2018-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் சம்பா நெல்பயிரை காப்பீடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நிகழாண்டில், கடலூர் மாவட்டத்தில் 882 வருவாய் கிராமங்களில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய வங்கி மூலமாக கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.
கடன் பெறாத விவசாயிகள், கடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனமான சோழமண்டலம் எம்.எஸ். பொது காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலமாகவும், பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
சம்பா நெல்பயிரிடும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற நவ.30-ஆம் தேதியாகும். எனவே, பயிர்க் காப்பீட்டு தொகையாக விவசாயிகள் நெல்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.405 மட்டும் செலுத்தினால் போதுமானது. முன்மொழிவு விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து வழங்க வேண்டும்.
இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் பாதிப்படையும்போது மாநில அரசு இடுபொருள் உதவித் தொகை அளிக்கும்பட்சத்தில், பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகையும் கிடைத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு பலன் கிடைத்திட வழிவகை உள்ளது. எனவே, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டிட விவசாயிகள் அனைவரும் உடனடியாக பயிர்க் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.