கிறிஸ்தவ தேவாலயங்களைச் சீரமைக்க வழங்கப்படும் நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்றிட கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கியிருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடமும், தேவாலயமும் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேவாலயத்தின் சீரமைப்புப் பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்ஃற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை அதிலுள்ள பிற்சேர்க்கை-2, 3-இல் உள்ளவாறு பூர்த்தி செய்து, அனைத்து உரிய ஆவணங்கள், சான்றிதழ்களோடு மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினரால் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களை தலஆய்வு செய்யப்படும். கட்டடத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதி அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.