கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் பிஎஸ்என்எல் - டெலிகாம் (DOT) ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் பிஎஸ்என்எல்-லின் முந்தைய நிறுவனமான டெலிகாம் நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. அதன்படி, 2017-ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய மாற்றம் இதுவரை வழங்கப்படவில்லையாம். இதனை உடனடியாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் மருத்துவப் படியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் - டெலிகாம் (DOT) ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.மேகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் ஐ.எம்.மதியழகன், மாநில தலைவர் பி.மாணிக்கமூர்த்தி, மாநில சிறப்பு அழைப்பாளர் எஸ்.முத்துகுமரசாமி ஆகியோர் உரையாற்றினர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்ட உதவி செயலர் கே.சிவசங்கர், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலர் ஆர்.மனோகரன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கம் பி.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதிலுமிருந்தும் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.