கடலூரில் கலை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையானது, பாரம்பரிய கலைகளை மாணவ, மாணவிகளிடம் வளர்க்கும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக நிகழாண்டில் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக கலை ஆசிரியர்களுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சிக் கூட்டம் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் சார்பில் கடலூரில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலர் க.பழனிச்சாமி தொடக்கி வைத்தார். காலையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த கலை ஆசிரியர்களுக்கும், மாலையில் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த கலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் க.சுந்தரமூர்த்தி மற்றும் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.