கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 197 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில், பண்ருட்டி வட்டம், வாழப்பட்டு கிராமத்தில், "ஏசு நேசிக்கிறார்' என்ற தேவாலய கட்டடம் பழுது பார்த்தல், பராமரிப்பு பணிகளுக்காக முதல் தவணையாக ரூ.2.25 லட்சத்துக்கான காசோலையை தேவாலய பாதிரியார் டேவிட் சுந்தரராஜிடம் ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பண்ருட்டி வட்டம், மாளிகைமேடைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவருக்கு ரூ.5,018 மதிப்பில் சலவைப் பெட்டி, புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இலியாஸ் என்பவர் கடந்த ஜுன் மாதம் கடலில் மூழ்கி இறந்தமைக்காக அவரது மனைவி ஜீனத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையான ரூ.ஒரு லட்சமும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரியம் மூலமாக 4 நபர்களுக்கு தலா ரூ.17 ஆயிரத்தில் ஈமச்சடங்கு நிதியும் வழங்கப்பட்டது.