கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பெண் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக திட்டக்குடி அருகே உள்ள இளமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி சிவசக்தி (30) என்பவர், தனது மகன்கள் பிரக்யன் (8), யாத்திரிகன் (4) ஆகியோருடன் வந்திருந்தார். அப்போது சிவசக்தி திடீரென பார்வையாளர் அரங்கின் அருகே மயங்கி விழுந்தார். அப்போது உடனிருந்த அவரது மகன்கள் அழுதனர்.
அவர்களிடம் விசாரித்ததில் சிவசக்தி விஷம் அருந்தியிருந்தது தெரிய வந்தது. உடனே, அங்கிருந்த போலீஸார் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிவசக்தி அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:
சிவசக்தியின் கணவர் ராஜா திட்டக்குடி மின்துறை அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து சிவசக்தி தனது 2 பிள்ளைகளை வளர்க்கவும், வறுமையை போக்கவும் சத்துணவு திட்டத்தில் வேலை கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். ஆனால், பல முறை முறையிட்டும் அவருக்கு பணி கிடைக்கவில்லையாம். இதையடுத்து, மனமுடைந்த நிலையில் மனு வழங்க வந்த இடத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தது தெரியவந்தது.