பண்ருட்டி வட்டத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைவுபடுத்தியுள்ளது. எதிர்வரும் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிலையில், வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது காட்டாண்டிக்குப்பம், பெரியகாட்டுப்பாளையம், கீழிருப்பு, மேலிருப்பு, விசூர், காடாம்புலியூர் கிராமங்கள். கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையால் திடீரென ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி இந்தப் பகுதியில் 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலத்த பொருள் சேதங்களும் ஏற்பட்டன.
இந்த நிலையில், காட்டாண்டிக்குப்பம், பெரியகாட்டுப்பாளையம், கீழிருப்பு, மேலிருப்பு, விசூர், காடாம்புலியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஓடைகள் தூர்வாரும் பணி, நீர்நிலை கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரு
கின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர்கள் கபிலன், வெங்கடேசன், வட்டாட்சியர் ஆறுமுகம் (பண்ருட்டி) ஆகியோர் உடனிருந்தனர்.