பண்ருட்டி அருகே மளிகைக் கடையின் கதவை உடைத்து, ரூ.37 ஆயிரத்தை திருடியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி, திருவதிகை, வீரட்டானேஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வருபவர் துரைசாமி (45). பழைய கடலூர் சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு துரைசாமி வழக்கம்போல தனது கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
சனிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்தவர், பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் அதன் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ.37 ஆயிரம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.